கொங்கு நாட்டு திருத்தலங்கள்
கொடிமாடச்செங்குன்றூர்.
சிவதலம் பெயர் : கொடிமாடச்செங்குன்றூர் (திருச்செங்கோடு)
இறைவன் பெயர்: அ/மி அர்த்தநாரீஸ்வரர், மாதொரு பாகர்
இறைவி பெயர் : அ/மி பாகம்பிரியாள்
பதிகம் திருஞானசம்பந்தர்
- 1
திருச்செங்கோடு சேலத்தில் இருந்து 27 கி.மி. தொலைவிலும், ஈரோட்டில்
இருந்து 18 கி.மி. தொலைவிலும் உள்ளது. பேருந்து வசதிகள் சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல்
ஆகிய இடங்களில் இருந்து திருச்செங்கோட்டிற்கு உள்ளது.
தேவாரப் பதிகங்களில் கொடிமாடச் செங்குன்றூர் என்று
பாடப்பெற்ற சிவதலம் தற்போது திருச்செங்கோடு என்று
கூறப்படுகிறது. இந்த சிவதலத்தில் உள்ள கோவில் மேற்கு நோக்கி ஒரு சிறிய குன்றின் மீது
அமைந்துள்ளது. இந்த மலை செந்நிறமாக இருப்பதால், செங்கோடு என்ற பெயர் ஏற்பட்டது. கடல்
மட்டத்தில் இருந்து சுமார் 1900 அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோவிலுக்குச் செல்ல சுமார்
1250 படிக்கட்டுக்கள் கொண்ட வழியில் ஏறியும் அல்லது மலைப்பாதை வழியாகப் பேருந்து
மற்றும் மகிழ்வுந்து மூலம் செல்லலாம்.
மேலே செல்லும் வழியில் பல மண்டபங்கள் உள்ளன. குன்றின் உச்சிக்குகச் சென்றவுடன்
வடதிசையில் 5 நிலை ராஜ கோபுரம் நம்மை வரவேற்கிறது. குளிர்ந்த காற்று
நம்மை தழுவும் பொழுது நமக்கு புத்துணர்சி ஏற்படுகிறது.ஏறி வந்த களைப்பு விலகி உற்சாகம்
வருகிறது.
அர்த்தநாரீஸ்வரர், மாதொரு பாகர் என்று அழைக்கப்படும் மூலவர்
சுமார் 6 அடி உயரம் உள்ள உளி படாத சுயம்புத் திருமேனியாக பாதி ஆணாகவும் பாதி பெண்ணாகவும்
மேற்கு நோக்கி கம்பீரமாக காட்சி அளிக்கிறார்.
செங்கோட்டு வேலவர் சந்நிதி மிகவும் புகழ்
பெற்றது. தினமும் உச்சிக்காலத்தில் மட்டும் இவருக்கு அபிஷேகத்துடன் முதல் பூஜை நடக்கிறது.
அருணகிரிநாதர் தனது "திருப்புகழில்" இத்தலத்து முருகனைப் பற்றி பாடியுள்ளார்.
செங்கோட்டு வேலவர் சந்நிதிக்கு முன்புள்ள மண்டபத்திலுள்ள தூண்களில் காணப்படும் சிற்பங்கள்
நுணுக்கமான வேலைப்படுடன் கூடியவை.
படிக்கட்டுகள் வழியே மலைக்குச் செல்லும் வழியில் பாறையில் செதுக்கப்பட்டுள்ள
நாகர் சந்நிதி
60 ஆம் படி மிகவும் விசேஷம்.இங்கு செய்யும் சத்யம் நீதி மன்றத்திலும்
செல்லும் எனக்கூறப்படுகிறது.
”வெந்த வெண்ணீறு அணிந்து விரிநூல் திகழ்மார்பில் நல்ல
பந்து அணவும் விரலாள் ஒருபாகம் அமர்ந்து அருளிக்
கொந்து அணவும் பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
அந்தணனைத் தொழுவார் அவலம் அறுப்பாரே”