Sunday, January 6, 2013

தமிழில் சங்கல்பம்


 தமிழில் சங்கல்பம்


சிறிது மலர்களையும் அட்சதையையும் எடுத்துக்கொண்டு கை கூப்பிக்கொள்ளவும். பின் வரும் மந்திரங்களைக் கூறவும்.

ஓம் விநாயகப்பெருமானே போற்றி!
ஓம் முருகப்பெருமானே போற்றி!
ஓம்  சிவபெருமானே போற்றி!
ஓம் உமை அம்மையே போற்றி!
ஓம் எஙகள் குல தெய்வமே போற்றி!
ஓம் எங்கள் இஷ்டதெய்வமே போற்றி!
(அவரவர் அன்னை, தந்தை, குரு, முன்னோர்களை மனதில் தியானம் செய்யவும்.)
எல்லாம் வல்ல சிவபெருமானே போற்றி போற்றி.
இன்று -------- வருடம், -----------(தக்‌ஷிணாயனம்/ உத்தரயணம், ) ------ருது,
----மாதம், --------(வளர் பிறை/ தேய்பிறை),-------திதியில், -------கிழமை,-----நட்சத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில், ------(காலை/மாலை) வேளையில், -------- இறைவனுக்கு, (108நாமவளிகள்/ 1000 நமாவளிகள்) கூறி வழிபட இருக்கிறோம். இந்த ஊரும் உலகமும், நாங்களும், எங்கள் உறவுகளும், நண்பர்களும், மற்றும் எங்கள் குடும்பமும், நீண்ட ஆயுளும், நோயற்ற வாழ்வும், நிறைந்த செல்வமும், நல்ல புத்தியும், மன அமைதியும்,மனமகிழ்ச்சியும் பெறவும், எங்கள் ஜாதகத்தில் உள்ள குறைகள் நீங்கி, நவகோள்களும் நன்மையே செய்யவும், நாங்கள் செய்த பாவங்கள் போகவும், வியாதிகள் அகலவும், துன்பங்கள் தொடராமல் இருக்கவும், உன்னை என்றும் மறவாமல்  வழிபடவும், அருள் புரிவாய். மேலும் எங்கள் குழந்தைகள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும், நல்ல வேலை வாய்ப்பு, பதவி உயர்வு, வீடு வாகன வசதிகள் பெருகவும், இளவயதினருக்கு உரிய வயதில் திருமணம்  கை கூடவும், திருமணமான மகளிருக்கு மாங்கல்ய பலமும்,தம்பதியர்க்கு நன்மக்கள் பேறு கிடைக்கவும் அருள் புரிவாய். நாங்கள் மனம் மொழி மெய்யால் நல்லதையே செய்யவும், நல் அருள்புரிவாய், கோயில்கள் தோறும் வழிபாடுகள் குறைவற நடைபெறவும் நாட்டில் நல்ல மழை பொழிந்து நாடு செழிக்கவும் உன்னை வழிபடுபவர்களின் மனக்குறை எல்லாம் நீங்கவும் நீ எப்போதும் எங்களுக்கு துணையாக இருக்கவேண்டும்.
( அவரவர் பெயர், நட்சத்திரம் கூறி அவரவர் வேண்டுதல்களை மனதில் சிந்தித்து வழிபடவும்.)
மலர்களை வழிபடும் தெய்வத்திடம் சேர்க்கவும்.
நாமாவளி கூறி அருச்சனை செய்து வழிபடவும்.
அருச்சனை முடிந்த பிறகு
1. ஊதுபத்தி காட்டுதல்
2.தீபம் காட்டுதல்
3. திருவமுது படைத்தல்.
4. தாம்பூலம் அளித்தல்.
5. கற்பூரம் காட்டி வழிபடுதல்.
6. மலர் தூவுதல்.
இறைவனை மனதில் இரத்தினங்கள் இழைத்த சிம்மாசனத்தில் அமரச்செய்து, சங்கொலி செய்தல், சாமரம் வீசுதல், நிறை குடம் காட்டுதல், கண்ணாடி காட்டுதல்,குடை அளித்தல், கொடி அளித்தல், மணி ஓசை செய்தல், மங்கள இசை முழங்குதல், நான்கு வேதங்கள் கூறுதல், திருமுறை விண்ணப்பம் செய்தல், இறைவனுக்கு தோத்திரங்கள் கூறி பாடல்கள் பாடுதல், வலம் வந்து வழிபடுதல் ஆகியவை செய்து பின் நாம் இதுவரை செய்த வழிபாட்டில் குறைகள் இருந்தால் மன்னிக்கும்படி வேண்டுதல்.

”கல்லாப்பிழையும் கருதாப்பிழையும் கசிந்துருகி
நில்லாப்பிழையும் நினையாப் பிழையும் நின் ஐந்தெழுத்தை
 சொல்லாப்பிழையும் துதியாப்பிழையும் தொழாப்பிழையும்
 எல்லாப்பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே.”

உன் பாத கமலங்களில் சரண் அடைந்தோம் எங்களைக் காப்பாற்றுவாயாக!
என்று கூறி மங்களம் பாடுதல்.

                                                சுபம்    மங்களம்.





No comments:

Post a Comment